பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் எத்தனை நன்மைகள் உண்டு தெரியுமா ?
நமது வம்சத்தில் எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான முன்னோர்களை கடந்த பின் இப்போது நாம் அவர்களின் வாரிசாக பிறப்பெடுத்திருக்கிறோம். பல காலங்களுக்கு முன்பாக மறைந்து விட்ட அவர்களை பித்ருக்கள் என நமது சாத்திரங்கள் கூறுகின்றன. அவர்களை வழிபடுவது பித்ருக்கள் வழிபாடு எனப்படுகிறது. இந்த பித்ருக்கள் அல்லது முன்னோர்கள் வழிபாட்டின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் இந்த உலகில் மனிதர்களாக பிறப்பதற்கு நமது தாய் தந்தையரே காரணம். அவர்கள் இந்த உலகில் பிறக்க அவர்களின் தாய் தந்தையர் காரணம். அவர்களின் தாய் தந்தையர் நமக்கு உறவுமுறையில் தாத்தா பாட்டி என்றாகின்றனர். அவர்களின் தாய் தந்தையர் மற்றும் தாத்தா பாட்டிகள் நமக்கு முன்னோர்கள் ஆகின்றனர். இவர்கள் இறந்து விட்ட பிறகு “பித்ருக்கள்” என்றழைக்கப்படுகின்றனர். படைப்பாற்றல் என்பது ஒரு தெய்வத்தன்மை வாய்ந்த காரியமாகும். அது எந்த வகை படைப்பானாலும் சரி ஒரு ஆணும், பெண்ணும் இந்த உலகத்திற்கு ஒரு மனித உயிரை புதிதாக கொண்டுவருவது ஒரு தெய்வீக அம்சமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பெற்றோர்களாகிய அந்த ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்வில் செய்த பல காரியங்களுக்கான கர்ம வினைகள் அவர்களின் வாரிசுகளை தொடர்கிறது.
தங்களின் அறியாமை மற்றும் கவனமின்மையால் பாவச்செயல்களை செய்தவர்கள் பூவுலகில் பலர் உண்டு. இப்படிப்பட்டவர்கள் இறந்து பித்ருக்கள் லோகத்தில் வசிக்கும் போது, அவர்கள் தங்கள் வாழ்வில் அறியாமல் செய்த பாவத்திற்காக துயருறுகின்றனர். இவர்களின் வாரிசுகள் இவர்களுக்கு வருடத்தில் வரும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய காலங்களில் தர்ப்பணம், ஷரார்த்தம் போன்றவற்றை அளிப்பதால் அவர்களின் துன்பம் நீங்குகிறது. அவர்களும் மனம் மகிழ்ந்து தங்களின் வம்சாவளியினரை ஆசிர்வதிக்கின்றனர். நமக்கு இப்பிறவியை அளித்த அவர்களுக்கு நன்றிகூறும் நிகழ்வாகவும் இச்சடங்கு அமைகிறது. இது போன்ற நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதால் ஒருவருக்கு இருக்கும் பித்ரு சாபமும் நீங்குகிறது. இதனால் அவர்களின் வம்சாவளியினர் சிறப்பாக வாழ்வர்.
மறைந்த நம் முன்னோர்கள் வாழும் காலத்தில் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் மறைந்த பிறகு அவர்களின் வம்சாவளியினர் நன்றாக இருக்க விரும்புவதாக பிறப்பு, இறப்பு சூட்சமங்களை பற்றியறிந்த ஞானிகள் கூறுகின்றனர். பித்ருக்களுக்கு உரிய காலத்தில் தர்பண, ஸ்ரார்த்த சடங்குகளை செய்யாதவர்களின் வாழ்வில் பல இன்னல்கள் ஏற்படுவது பலர் அனுபவபூர்வமாக கண்ட உண்மையாக உள்ளது. இத்தனை காலம் பித்ருக்குரிய கடன்களை செய்யாதவர்களும் கூட இனி வரும் காலங்களில் ஆவது புண்ணிய தினங்களில் முன்னோர்களை வழிபாடு செய்வதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அன்றைய தினத்தில் இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களுக்குரிய வஸ்துக்களை தர்மம் செய்வது பித்ருக்கள், ரிஷிகள், தேவர்கள் மற்றும் இறைவன் என அனைவரின் ஆசிகளையும் பெற்றுத்தரும்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments