மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை

 மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை





மார்கழி மாதத்தினை ஆன்மீக ரீதியாக பார்த்தோமேயானால் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கிறது. ஆனால் இந்த மாதத்தில் திருமணம் நடத்தக்கூடாது என்ற ஒரு கருத்தும், மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று கூறுவதும் நம் வழக்கத்தில் உள்ளது. ஆனால் உண்மையில் மாதங்களில் எல்லாம் மிகவும் சிறந்த மாதமாக இருப்பது மார்கழிதான். இது ‘பீடை’ மாதம் அல்ல. மார்கழி ‘பீடு’ மாதம். ‘பீடு’ என்றால் உயர்ந்த, பெருமை வாய்ந்த, கம்பீரமான என்பதையெல்லாம் குறிக்கிறது. இந்தப் பீடு என்ற சொல் தான் காலப்போக்கில் பீடை என்று மாறிவிட்டது. ஆகவே மார்கழி மாதம் என்பது மிகவும் உயர்ந்த மாதமாக கருதப்படுகிறது.

அடுத்ததாக இந்த மாதத்தில் திருமணம் நடத்தக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் என்ற சந்தேகம் நமக்கு வரும். இந்த மார்கழி மாதத்தில் உயிர் உருவாகும் தன்மை இல்லாத காரணத்தினால் தான் இந்த மாதத்தில் திருமணம் நடத்தப்படுவதில்லை. இந்த மாதத்தில் ஒரு விதையை விதைத்தால் கூட அது முளைத்து வராது. இதனால் தான் நம் முன்னோர்கள் இந்த மாதத்தில் திருமணத்தை வைக்கக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

மார்கழி மாதத்திற்கு உண்டான தனிசிறப்பு பெண்கள் வாசலில் மாக்கோலம் போடுவதுதான். மார்கழி மாதத்தில் காலையில் நாம் சுவாசிக்கும் சுவாசத்தில் ஆக்ஸிஜனின் அளவு அதிகமாக இருக்கும். இது நம் உடலுக்கு நன்மையைத் தரும். இதனால் தான் பெண்கள் மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் கோலம் போடும் பழக்கத்தையும், ஆண்களும் குழந்தைகளும் பஜனைக்கு செல்ல வேண்டும் என்ற பழக்கத்தையும் நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.  ஆனால் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பெண்கள் இரவு வேளையிலேயே கோலத்தைப் போட்டு முடித்து விடுகின்றனர். இது தவறான பழக்கம். மார்கழி மாதம் சூரிய உதயத்திற்கு முன்பு, அதிகாலை 4 மணி அளவில் தான் வாசலில் கோலம் போட வேண்டும்.

மார்கழி மாத பஜனையை ஆண்களும் சிறு குழந்தைகளும் அந்த இறைவனின் நாமத்தை பாடிக்கொண்டு அவரவர் ஊர் வீதியில் வலம் வருவார்கள். இந்த பஜனையானது தனி ஒருவர் நலனிற்காக பாடப்படுவது இல்லை.  இந்த பஜனையின் போது உச்சரிக்கப்படும் இறைவனின் திருநாம ஒளியானது அந்த ஊர் முழுவதும் ஒளிக்கப்படுகின்றது. நம் ஊரும், நம் ஊரில் உள்ள மக்கள் அனைவரின் நலனுக்காகவும்,  நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த பஜனை. இந்தக்காலத்தில் பஜனை செய்யும் பழக்கமும், பஜனைக்கு செல்லும் பழக்கமும் குறைந்து கொண்டுதான் வருகிறது.

சூரிய உதயத்திற்கு முன்பாகவே குளித்து முடித்துவிட்டு நம் வீட்டு பூஜை அறையிலும், வீட்டு வாசலிலும் தீபம் ஏற்றி வைத்து இறைவனின் நாமத்தை துதித்து பூஜை செய்வது நமக்கு கோடி புண்ணியத்தை தரும். மார்கழி மாதக் குளிரில் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவது சுகம்தான். இந்த சுகத்தை எவர் ஒருவர் தவிர்த்து, இறைவனை வழிபட அதிகாலை வேளையில் விழிகின்றாரோ.. அவர் தன் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்தும் மீண்டு, வெற்றிப் பாதையை நோக்கி செல்வார்கள். இந்த மார்கழி மாத அதிகாலை வேளையில் நம் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டு அந்த இறைவனை வழிபடுவோம்.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments