தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்றழைக்கப்படுகின்ற திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் வரலாறு
உச்சிப்பிள்ளையார் கோவில் மலையானது மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார். மலையின் நடுபகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கின்றார். இதைத்தவிர பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் பல ஆயிரம் நூற்றாண்டுகள் கழித்தும் இன்றும் அழியாமல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.
திருச்சிராப்பள்ளி மூன்று தலைகளை கொண்ட திரிசிரன் என்ற அசுர அரசன் இந்தப் பகுதியை ஆண்ட போது திரிசிரபுரம் என்று அழைக்கப்பட்டு பின்பு சிராப்பள்ளி என்று மாறி தற்சமயம் திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்பட்டு வருகிறது.
தல வரலாறு
ராமர் பட்டாபிஷேகத்தில் கலந்துகொண்ட விபீஷணர், தன் தேசமான இலங்கைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ராமரின் பட்டாபிஷேகத்தில் விபீஷ்ணர் கலந்து கொண்டதற்காக நன்றி கூறி, ரங்கநாதரின் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. அதனை தன் கையில் எடுத்துக்கொண்டு தெற்கு பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த விபீஷணனுக்கு களைப்பு ஏற்பட்டது. அந்த சமயம் காவிரி கரையோரத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பினார் விபீஷணர்.
தன் கையிலுள்ள சிலையை, அவர் பக்கத்தில் வந்து கொண்டிருந்த ஒரு சிறு பாலகனிடம், சற்று நேரம் வைத்திருக்கும்படி கொடுத்துவிட்டு தன் கண்களை மூடி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். ஆனால் அந்த சிறுவனோ, சிலையை தரையில் வைத்துவிட்டு அருகில் உள்ள மலையின் மீது சென்று அமர்ந்து கொண்டான். களைப்பாறி விட்டு கண்களைத் திறந்து பார்த்த விபீஷணனுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.
அந்த சிறுவனை தேடிப்பார்த்தால் காணவில்லை. தரையில் இருந்த ரங்கநாதரின் சிலையை எடுக்க முயன்றபோது அது நகரவில்லை. அந்த விநாயகர் தான் சிறு பாலகனின் ரூபத்தில் வந்து, அந்த சிலையானது இலங்கைக்கு செல்லாமல் தடுத்து இருக்கின்றார். தற்போது அந்த சிலை ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத பெருமாளாக காட்சியளிக்கின்றது. மலையின் உச்சியில் அமர்ந்திருந்த விநாயகரை கண்டுபிடித்த விபீஷணர், விநாயகரின் தலையில் ஒரு கொட்டு வைத்ததாக வரலாறு கூறுகிறது.
தாயுமானசுவாமி உருவான கதை
இப்பகுதியில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வரும் நேரம் அது. முன்னதாகவே தன் தாய்க்கு செய்தி அனுப்பிவிட்டு, தாயின் வருகைக்காக காத்திருந்தாள். அவளின் தாய்வீடு காவிரி கரைக்கு அந்தப்பக்கம் உள்ளது. அந்நேரத்தில் காவிரிக்கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது என்று புரியாத அந்த கர்ப்பவதி அந்த ஈசனை நினைத்து பிரார்த்தனை செய்தாள். அந்த சமயத்தில் தாய் வேடத்தில் வந்த அந்த ஈசன் தான், கர்ப்பிணிக்கு சுகப்பிரசவமாக உதவிசெய்து, நலமாக பிள்ளையை பெற்றெடுக்க அருள்பாவித்தார். சிறிது நேரம் கழித்து கர்ப்பவதியின் நிஜமான தாய் வந்த பின்புதான் அந்த ஈசனே வந்து உதவியது அவர்களுக்கு புரிந்தது. அந்த இடத்தில் மட்டுவார்குழலியுடன் ஈசன் அனைவருக்கும் காட்சி தந்தார். இதன் மூலமாகத்தான் தாயுமான சுவாமிகள் என்ற பெயரினை அவர் பெற்றார். இந்தக் காலத்திலும் தாயுமான சுவாமியை வழிபட்டால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
தரிசன நேரம்:
காலை 6.30AM – 8PM திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் இந்தக் கோவில் திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில்,
திருச்சிராப்பள்ளி – 620 002.
தொலைபேசி எண் +91-431- 270 4621.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments