நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்

 நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்


பிரதோஷம் விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும்.

ருணம் என்றால் கடன். கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நோயினால் பலரும் கடனாளியாகின்றனர். இன்றைய தினம் ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை. ரத்ததானம், அன்னதானம், பூஜைகளுக்காக மலர் தானம் போன்றவை செய்வது நல்லது.

அபிஷேகப்பிரியரான சிவனடியார்க்கு கறந்த பாலில் அபிசேகம் செய்வது சிறப்பு. தூய்மையான இளநீரில் அபிஷேகம் செய்வதும் நன்று. இறைவன் இயற்கையை விரும்பக்கூடியவர். இயற்கையான வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக்கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகலதோஷங்களும், பிரம்மஹத்தி தோஷமும், ஏழு ஜென்மங்களில் உண்டான தோஷமும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும்.

எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே குளித்து விட்டு வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும், நோய்களும் நீங்கும் என்பது சிவ வாக்கு. உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வருமானம் அதிகரிக்கும். இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பூஜித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ருண விமோசன பிரதோஷ நாளில் இருக்கும் மௌன விரதம் கூடுதல் பலன் தரும். இந்த நாளில் சிவபுராணம், நீலகண்டப் பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்.


Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments