திருவாதிரை ஆருத்திரா தரிசனம் சிறப்புக்கள்

 திருவாதிரை ஆருத்திரா தரிசனம் சிறப்புக்கள்


மகத்துவமங்கள் நிறைந்த மாதம் மார்கழி மாதமாகும். இறைவன் வழிபாட்டிற்குரிய மாதமென்றும் சிலர் மார்கழி மாதத்தை பற்றிய சிலரின் கருத்தாகும். இம்மாதத்தில் நாடெங்கிலும், அதிலும் குறிப்பாக ஆன்மீக பூமியான தமிழகத்தில் அனைத்து முக்கிய கோயில்களிலும் தினந்தோறும் ஏதாவது ஒரு விசேஷங்கள் நடந்து கொண்டே இருக்கும். உலகம் அனைத்தையும் இயங்கச் செய்யும் தனது திருநடன கோலத்தில் இருக்கும் “தில்லை நடராஜர்” பெருமானை வழிபடுவதற்குரிய “திருவாதிரை ஆருத்திரா தரிசன விழா” இம்மாதத்தில் தான் வருகிறது. இந்த திருவாதிரை ஆருத்திரா தரிசன தினத்தன்று சிவபெருமானின் அருளை பெற நாம் மேற்கொள்ளும் விரத முறைகளும், அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மார்கழி மாதம் என்பது தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு பிரம்மமுகூர்த்த நேரமாகும். இந்த மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று சிதம்பரம் எனப்படும் தில்லையில் நடராஜ பெருமானாக ஆடல்புரிந்து கொண்டிருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்கு தேவர்கள் அனைவரும் கூடிவருவதாக ஐதீகம். இந்த தினத்தில் தான் பதஞ்சலி முனிவருக்கும், ஆதிசேஷனுக்கும் தனது திருநடன தரிசனத்தை காட்டினார் தில்லை நடராஜ பெருமான். “ஆதிரை” என்பது அக்னியை ஒத்த ஒளியை வெளிப்படுத்தும் ஒரு நட்சத்திரமாகும். சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாதவர் என்றாலும், இந்த ஆதிரை நட்சத்திரத்தின் ஒளிப்பிழம்பு தன்மை சிவபெருமானின் அம்சமாக கருதி சைவ சமயத்தவர் இத்தினத்தை கொண்டாடுகின்றனர். இந்த தினத்தில் சிவனின் தரிசிப்பது “ஆருத்திரா தரிசனம்” என்றழைக்கப்டுகிறது.

மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ள வேண்டும். சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். இந்த திருவாதிரை தினத்தில் அரிசி மாவு, வெல்லம் மற்றும் பருப்புகளை கொண்டு செய்யப்படும் திருவாதிரை களியை சுவாமிக்கு படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்றைய தினம் பகல் முழுவதும் சாப்பிடமால் விரதம் மேற்கொள்ள வேண்டும். சிவபெருமானின் புகழை கூறும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். மாலையில் மீண்டும் சிவாலயம் சென்று சிவனை வழிபட்டு, திருவாதிரை களி சாப்பிட்டு உங்களின் விரதத்தை முடிக்க வேண்டும்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்களின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது . இந்த ஐந்து பஞ்சபூதங்களின் தன்மை கொண்ட ஆலயங்களாக சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகிய கோயில்கள் இருக்கின்றன. இதில் ஆகாய தன்மை கொண்ட சிதம்பர நடராஜ பெருமானை இந்த மார்கழி திருவாதிரை தினத்தில் தரிசிப்பதால் ஒருவருக்கு வாழ்வில் செல்வம், இன்பங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்று இறுதியில் முக்தி எனப்படும் வீடு பேறு கிட்டும்.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments