பங்காரு காமாட்சி கோயிலில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள்
தஞ்சை பங்காரு காமாட்சி ஆலயத்தில், வைகாசி மாத நிறைவையொட்டி சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.
தஞ்சாவூரின் முக்கியப் பகுதியான மேலவீதியில் உள்ளது ஸ்ரீபங்காரு காமாட்சி அம்மன் ஆலயம். காஞ்சி மாமுனிவர், மகா பெரியவாளின் திருவுளப்படி, அவரின் ஆசியுடன் எழுப்பப்பட்ட ஆலயம் இது என்கின்றனர் பக்தர்கள்.
சொர்ணத்தால் ஆன திருமேனியில், கிழக்குப் பார்த்தபடி காட்சி தருகிறாள் ஸ்ரீபங்காரு காமாக்ஷி. அருகிலேயே ஸ்ரீகாமகோடி அம்மனும் சந்நிதி கொண்டு, அனைவருக்கும் அருள் வழங்குகிறாள்.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் இங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதமும் புரட்டாசி நவராத்திரியும் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படும்.
மேலும் வைகாசியிலும் ஆனி மாதத்திலும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்களும் விசேஷ பூஜைகளும் நடக்கின்றன. வைகாசி மாதம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையொட்டி இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாளை செவ்வாய்க்கிழமையும் காலையும் மாலையும் பங்காரு காமாட்சி அன்னைக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. வைகாசி மாதத்தின் கடைசி செவ்வாயான நாளைய தினத்தில் அம்பாளுக்கு வேண்டிக் கொண்டால், நினைத்த காரியம் யாவும் தடங்கலின்றி நிறைவேறும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments