மயிலை முண்டகக்கண்ணி அம்மன் கோயில் கூழின் மகிமைகள்..
சென்னையில் உள்ள மிக பழமையான திருத்தலங்களில் ஒன்று மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில். பழமையான பல திருத்தலங்களை ஒப்பிடுகையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள முண்டகக்கண்ணி அம்மன் மிகவும் பழம்பெருமையும், பல்வேறு சிறப்புக்களையும் கொண்டது.
1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குளம் இருந்துள்ளது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப்பெரிய ஆலமரம் இருந்தது.
ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அப்பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி காட்சி தந்தாள் என்கிறது இத்தலத்தின் வரலாறு. மேலும் தாமரை மொட்டு வடிவத்திலேயே தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதால் தாமரை என்ற தமிழ்ச் சொல்லுக்குரிய முண்டகம் என்பதை குறிப்பிடும் வகையில் அம்மனுக்கு முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயர் பெற்றதாக இக்கோவில் புராணம் கூறுகிறது.
அத்தகைய சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் தற்போது ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்துவாரங்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு கோவில் சார்பில் கூழ் வழங்கப்படும். அம்மன் கோவிலில் வழங்கப்படும் இக் கூழில் மருத்துவகுணம் உள்ளதால் எண்ணற்ற பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து கூழ் அருந்தி மகிழ்ந்து வருகிறார்கள்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments