திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தல வரலாறு
தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தும் அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் தான் முருகப்பெருமான். சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளை உருவாக்கி, அந்த தீப்பொறியில் இருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் பூமியில் அவதாரம் எடுத்தார்.
பூமியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த சூரர்களை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன் கையிலேயே வைத்துக் கொண்டார். இந்தப் போரானது திருச்செந்தூரில் நடந்தது. போரில் வெற்றி கண்ட முருகப்பெருமான் கையில் வேலுடன் திருப்பரங்குன்றம் வந்தடைந்தார்.
அசுரர்களை அழித்து வெற்றி கொண்ட முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது மகளான தெய்வானையை மணம் செய்து தந்தது இந்த திருப்பரங்குன்றத்தில் தான். திருமணத்திற்கு அனைத்து தெய்வங்களும், தேவர்களும், மகரிஷிகளும் முப்பெரும் தேவியரும் வந்து ஆசி வழங்கினர். அந்த நாரத முனியின் முன்னணியில் தான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது.
இதே திருமண கோலத்தில்தான் அந்த முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில் இன்றளவும் பக்தர்களுக்கு காட்சி தந்து கொண்டிருக்கின்றார். இந்த சம்பவத்திற்குப் பிறகு சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமி என்ற பெயர் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சிறப்பு:
அறுபடை வீட்டினை கொண்ட முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகும். இந்த கோவிலில் மூலவர் முருகனுக்கு அபிஷேகம் நடை பெறாமல், முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடப்பது மற்றொரு சிறப்பு. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைப்பு:-
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்புகளும், இதர சிற்ப அம்சங்களும் உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.
அர்த்த மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும் திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய தூண்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும் முருகன் தெய்வானை திருமணக்கோலம் போன்ற தூண்கள் அமைந்துள்ளன.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் திருவிழாக்கள்:
வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பிரார்த்தனை:
Thirupparamkunram Murugan Temple: திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து அந்த முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை.
ராகுகாலத்தில் இந்த கோவிலில் இருக்கும் துர்கை அம்மனை வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நேர்த்திக்கடன்:
இக்கோயிலில் அதிகளவில் அன்னதானம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் திறக்கும் நேரம்:
காலை 05.30 மணி முதல், 01.00 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
பின் மாலை 04.00 மணி முதல் 09.00 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முகவரி:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருப்பரங்குன்றம் – 625 005 மதுரை மாவட்டம்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments