கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு

 கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு



மகுடேஸ்வரர்

இந்த கொடுமுடி திருக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு இவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் காணலாம். காவிரி நதி ஓடிக்கொண்டிருக்கும் திசையில் இருந்து மேற்கு கரையில் கொடுமுடி நாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்கு திசை பார்த்து அமைந்துள்ள இந்த கோவில் மிகவும் பிரம்மாண்டமானது. இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருக்கும் தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடு கோபுர வாயிலின் வழியாக சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மனை தரிசனம் செய்யலாம். நடுவாயிலுக்கு வடபுறம் உள்ள  கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதரை தரிசிக்க முடியும். இந்த கோவிலில் வீற்றிருக்கும் லிங்கமானது சுயம்பு லிங்கமாகும். அகத்தியர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்ததற்கு அடையாளமாக லிங்கத்தின் மீது விரல் தடயங்கள் உள்ளதை காணலாம்.

இந்தக் கோவிலில் இருக்கும் மற்றொரு சிறப்பு இங்கு வளர்ந்து நிற்கும் வன்னிமரம் தான். இந்த வன்னிமரத்தின் வயதை நம்மால் கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையானது. இந்த மரத்தில் பூக்கள் பூக்கிறது. ஆனால் காய் காய்க்காது. மரத்தின் ஒரு பக்கத்தில் முள் இருக்கும்.  மறுபக்கத்தில் முள் இருக்காது. இந்த மரத்தின் இலையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தண்ணீரில் இந்த இலையை போட்டு வைத்தால் தண்ணீரானது எத்தனை நாட்கள் ஆனாலும் கெடுவதில்லை.

பழனியில் நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு இங்கு ஓடிக்கொண்டிருக்கும் காவிரி நதியிலிருந்து எடுத்துச்செல்லப்படும் தீர்த்தத்தில், இந்த வன்னி மரத்தின் இலையை போட்டு தான் பக்தர்கள் பாதயாத்திரையாக எடுத்துச் செல்வார்கள் என்பது சிறப்பு வாய்ந்த ஒன்று.

தல வரலாறு

உன்னை விட நான் பெரியவனா? என்னைவிட நீ பெரியவனா? என்ற பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமல்ல. அந்த காலத்தில் இருந்தே ‘யார் பெரியவர்’ என்ற பிரச்சனை கடவுள்களுக்கும் இருந்துதான் வந்தது. இப்படித்தான் ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது.  

அந்தப் போட்டியில் மேருமலையை ஒரு கயிறு கட்டி ஒரு பக்கம் ஆதிசேஷனும், மறுபக்கம் வாயு தேவனும் இழுத்தனர். ஆதிசேஷன் மேரு மலையை தன் கைகளால் கட்டி அணைத்துக் கொண்டார். வாயு பகவான் அவரது காற்றின் வேகத்தால் ஆதிசேஷனை மலையை விட்டு கீழே தள்ள,  காற்றை வேகப்படுத்தி வீசினார். இதனால் மேரு மலையானது அழுத்தம் தாங்காமல் ஏழு துண்டுகளாக வெடித்து சிதறியது. வெடித்த துண்டுகள் அனைத்தும் ரத்தின கற்களாக மாறி லிங்கமாக உருமாறியது. அதில் ஒன்றுதான் கொடுமுடி. இந்த தளத்தில் வைர கல்லாலான லிங்கம் உள்ளது. இந்த லிங்கமே மகுடேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதுவே இந்தக் கோவிலின் வரலாறாக கூறப்படுகிறது.

பலன்கள்

நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். நாக தோஷம் நீங்குவதற்கு, ஒருவருக்கு எத்தனை வயது ஆகிறதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்ததாக வன்னி மரத்திற்கு அடியில், கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நாக தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறது வரலாறு.

செல்லும் வழி

ஈரோட்டில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவிலும் கொடுமுடி உள்ளது. 

தரிசன நேரம்: காலை 06.30AM – 12.00AM காலை 04.30AM – 09.00AM முகவரி: அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி-638 151, ஈரோடு மாவட்டம்.


தொலைபேசி எண் : 91-04204-222375 91-04204-225375 

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments