கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன்
கோவை நகரின் மையப் பகுதியில் கோனியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவை நகரை காக்கும் காவல் தெய்வமாக - தனிப்பெரும் அரசியாக விளங்கும் கோனியம்மன் தன்னை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு தனது திருவருளை வாரி வழங்கி வருகின்றாள்.
கோனியம்மன்” என்றால் “தெய்வங்களுக் கெல்லாம் அரசி” எனவும் பொருள்படும் மகிஷாசுரமர்த்தனி நமது கோவை மாநகரில் “கோனியம்மன்” என்று பெயர் பெற்றுப் பெருமையுடன் விளங்குகிறாள். மூலஸ்தானத்தில் வடக்குப் பார்த்துக் கோவில் கொண்டு உள்ள அம்மனின் சிலை உருவம் சுமார் 3½ அடி அகலமும் 2½ அடி உயரமும் உடையது.
அம்மனது தோற்றம் முகத்தில் மூண்ட கோபமும், உக்கிரமான பார்வையும் தம்முடன் எதிர்த்துச் சண்டையிட வந்த கொடிய அசுரனை தேவி அவன் பலத்தை ஒடுக்கி வீரவாளால் சிரத்தை வெட்டி வீழ்த்தி வீரவாகை சூடியது போல் விளங்குகின்றது. மகிஷாசுரமர்த்தனியின் வலக்கைகள் நான்கிலும் சூலமும், உடுக்கை, வாள், ஆகிய ஆயுதங்களும், இடக்கை கள் நான்கிலும் கபாலம், தீ, சக்கரம், மணி ஆகிய நான்கு ஆயுதங்களும் உள்ளன.
உலா வரும் அம்மனின் திருமேனி வலக்கரங்களில் சூலம், வாள், இடத்திருக்கரங்களில் உடுக்கை, தீ எனத்தாங்கி, நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலமுடையது. மூலஸ்தான திருவுருவத்தில் இடச் செவியிலே, தோடும், வலச் செவியிலே குண்டலமும் காணப்படுவதால் கோனியம்மன் ஏனைய சாதாரண சக்தியன்று.
அர்த்தநாரீஸ்வரர் தொடர்பு கொண்ட வீரசக்தியும் ஆவாள். கோனியம்மன் கோவிலின் பெருந்திருவிழாவான தேர்த் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதத்தில் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டு நடைபெறுகிறது மாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க் கிழமை ‘அக்கினி சாட்டு’ என்று கொடியேற்றப்பட்டு விழா தொடங்குகிறது.
மாசி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை(நேற்று) திருக்கல்யாண உற்சவம், நடைபெற்றது. வரும் வெள்ளியன்று இந்திர விமானத் தெப்பம், மறுநாள் தீர்த்தவாரி, கொடியிறக்கம் விழாக்கள் தொடருகின்றன 6-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று வசந்த விழாவுடன் திருவிழா இனிதே நிறைவு பெறுகின்றது.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments