உங்கள் குழந்தைகள் நலம் பெற, எதிரிகள் தொல்லை நீங்க இக்கோயில் செல்லுங்கள்

 உங்கள் குழந்தைகள் நலம் பெற, எதிரிகள் தொல்லை நீங்க இக்கோயில் செல்லுங்கள்




சூரபத்மன் எனும் அரக்கனை வதம் புரிய தோன்றியவர் தான் முருகபெருமான். அந்த முருகனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வழிபடுகின்றனர். அதில் மிகவும் பிரபலனமான வழிபாடு முருகனை பாலமுருகன் எனப்படும் குழந்தை வடிவில் வழிபடுவது. அப்படி குழந்தைகளுக்கு நல்லருள் புரியும் அருள்மிகு “எட்டுக்குடி முருகன் கோயில்” சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோயில் வரலாறு

நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்த சேரி என்கிற ஊரில் இறைத்தன்மை கொண்ட சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் சரவண பவ என்று உச்சரித்தவாறு இருந்த அந்த சிற்பி ஒரு அற்புதமான முருகன் சிலையை செதுக்கினான். அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னன் ஒருவன் அச்சிற்பி வடித்த சிலையில் சொக்கி போனான். இது போன்று தெய்வீகமான வேறு சிலைகளை அச்சிற்பி செதுக்க கூடாது என்கிற எண்ணத்தில் அந்த சிற்பியின் கட்டை விரலை மன்னன் வெட்டி வீசினான். இதனால் வேதனையடைந்த சிற்பி பக்கத்துக்கு ஊருக்கு வந்தான். அந்த ஊரில் தனது விட முயற்சியால் மற்றொரு அற்புதமான முருகன் சிலையை வடித்தான்.

தெய்வீகமான அந்த சிலையில் இருந்து ஒளி வீச தொடங்கியது. சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அச்சிலைக்கு உயிர் வந்து சிலையில் முருகன் அமர்ந்திருக்கும் மயில் பறக்க தொடங்கியது. அதை கண்ட மன்னன் அந்த மயிலை “எட்டிப்பிடி” என உத்தரவிட்டான். அதன் பிறகு அந்த மயில் அங்கேயே சிலையாக நின்று விட்டது. காலப்போக்கில் இந்த ஊரின் பெயரும் எட்டிப்பிடி என்பது எட்டுக்குடி என மாறிவிட்டது. அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோயில் சிறப்புகள் இந்த எட்டுக்குடி முருகன் கோயில் சிறப்பு என்னவென்றால் பார்க்கும் விதத்திற்கேற்ப முருகனின் விக்ரகம் நமக்கு காட்சி தருவதாகும். குழந்தையாக பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக பார்த்தால் இளைஞன் போலவும், முதியவராக பார்த்தால் முதியவர் தோற்றத்திலும் முருகன் காட்சியளிக்கிறார். கோயில் பிரகாரத்தில் முருகனின் நவ தளபதிகளுக்கும் சிலைகள் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், ஐய்யப்பன், மகாலட்சுமி, சௌந்தரராஜ பெருமாள், நவகிரகங்கள் ஆகியோருக்கும் சிலைகள் இருக்கின்றன.

சித்ராபௌர்ணமி தினத்தன்று இங்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. வான்மீகர் என்கிற சித்தர் சமாதி அடைந்த தலமாக இக்கோயில் இருக்கிறது. இக்கோயிலில் சஷ்டி விரதத்தையும், கவுரி விரதத்தையும் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். தீபாவளி அன்று கடைபிடிக்கப்படும் கேதார கௌரி விரதம் தோன்றிய தலம் இது என கூறப்படுகிறது. இக்கோயிலில் சத்ரு சம்ஹார சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. சத்ருக்களால் நமக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்க இந்த பூஜையை இங்கு செய்தால் சத்ரு தொல்லை நீங்கி நமக்கு நன்மை ஏற்படும் என்றும், மாறாக எதிரிகள் அழிய வேண்டும் என்கிற எண்ணத்தில் நாம் இத்தகைய பூஜையை ங்கு செய்தால் நமக்கு தீமைகள் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.

இங்கு முருகன் அம்பாறையிலிருந்து அம்பு எடுக்கும் கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார். பயந்த சுபாவம் உள்ள குழந்தைகள் இந்த முருகனை தரிசிப்பதாலும், அந்த முருகனின் வரலாறை குழந்தைகளுக்கு சொல்வதாலும் அவர்கள் பயம் நீங்கி படைப்பாற்றல் மிக்கவர்களாக திகழ்வார்கள் என்று பக்தர்கள் கூறுகின்றனர். 

கோயில் அமைவிடம் 

அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள எட்டுக்குடி என்கிற ஊரில் அமைந்துள்ளது.

 கோயில் நடை திறப்பு 

காலை 4.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோயில் எட்டுக்குடி – 610212 நாகப்பட்டினம் மாவட்டம் 

தொலைபேசி எண் 4366 – 245426


Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments