திருகொள்ளிக்காடு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில் பற்றிய தகவல்கள்
மனிதர்கள் மற்றும் ரிஷிகள் தவமிருந்து இறைவனை தரிசித்து பலனடைந்த திருத்தலங்கள் நம் நாட்டில் பல உண்டு. ஆனால் தேவர்களில் ஒருவராகிய “அக்னி” பகவானும் நவகிரகங்களில் ஒருவராகிய “சனி” பகவானும் தவிமிருந்து இறைவனை தரிசித்த ஒரு தலம் தான் “திருக்கொள்ளிக்காடு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில்” இக்கோவிலை பற்றியும் அதன் சில மகிமைகளை பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.
இக்கோவிலின் இறைவனாகிய சிவபெருமான் “அக்னீஸ்வரர்” என்றும் அம்மன் “மென்திருவடியம்மன்” என்றும் அழைக்கப்படுகின்றனர். மிகவும் பழமையான இந்த கோவிலை சோழ மன்னர்களில் “முதலாம் ராஜராஜனும்”, அவரது மைந்தனான “முதலாம் ராஜேந்திர சோழனும்” சீர்திருத்தி கட்டியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. புராணங்களின் படி நெருப்பு கடவுளான “அக்னி பகவான்” தனக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க இத்தலத்தில் தவமிருந்து, சிவபெருமானை வழிபட்டு, தனது தோஷத்தை போக்கி கொண்டதால் இந்த இறைவனுக்கு “அக்னீஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. நவகிரகங்களில் ஒருவரான “சனி பகவானும்” இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமானை வழிபட்டு, “பொங்கு சனியாக” இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். எனவே இத்தலம் திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு பிறகு சிறந்த சனி பரிகார தலமாக விளங்குகிறது. நளன் எனும் மன்னன் ஏழரை சனியின் தாக்கத்தால் தான் இழந்த பதவி, குடும்பம், நாடு ஆகியவற்றை இக்கோவிலில் உள்ள இறைவனை வழிபட்ட பிறகு பெற்றார் என்று கூறப்படுகிறது.
தல சிறப்பு ஜாதகத்தில் சனி பகவானின் ஏழரை சனி, மங்கு சனி, பொங்கு சனி, பாத சனி, அஷ்டம சனி போன்ற சனி பெயர்ச்சிகளை அடைந்தவர்கள் இந்த கோவிலில் வந்து இறைவனுக்கும் நவகிரகங்களுக்கும் வழிபாடு செய்வதால், சனி பெயர்ச்சிகளினால் கெடுதலான பலன்கள் ஏதும் ஏற்படாமல் நன்மைகளை அள்ளி தருவார் சனி பகவான் என்பது ஐதீகம். குறிப்பாக ஜாதகத்தில் “பொங்கு சனி திசை” நடப்பவர்கள் இங்கு வழிபடுவதால் இக்காலகட்டத்தில் சனி பகவானால் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும். மற்ற எல்லா கோவில்களிலும் நவகிரகங்க விக்கிரகங்கள் ஒருவரை ஒருவர் நேரடியாக பார்க்காதவாறு இருக்கும். ஆனால் இக்கோவிலில் “ப” வடிவில் ஒன்பது கிரகங்களும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருக்கின்றனர். இக்கோவிலின் இறைவனே சக்திபடைத்தவர் ஆதலால் இங்கிருக்கும் நவகிரக நாயகர்கள் தங்களின் கெடுதலான சக்திகளை இழக்கின்றனர்.
கோவில் அமைவிடம்
இந்த திருகொள்ளிக்காடு கோவில் தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூரிலிருந்து இக்கோவிலுக்கு செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன. கோவில் முகவரி
திருகொள்ளிக்காடு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருகோவில், திருகொள்ளிக்காடு, திருவாரூர் மாவட்டம் – 610205.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
மற்ற வார நாட்களில் காலை 7.30 முதல் மதியம் 12.30 வரை. மாலை 4.30 முதல் இரவு 7.30 வரை சனிக்கிழமைகளில் முழு தினமும் கோவில் நடை திறந்திருக்கும்.
தொலைபேசி எண்: 95853 82152
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments