மகா சிவராத்திரியின் வரலாறு: புராண கதைகள் சொல்வதென்ன?

 மகா சிவராத்திரியின் வரலாறு: புராண கதைகள் சொல்வதென்ன?

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று காலை முதலே பக்தர்கள் சிவ ஆலயங்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மகா சிவராத்திரியின் கொண்டாட்டத்தின் பின்னணியில் பல கதைகள் சொல்லப்படுகிறது. வில்வ மரத்தின் மேல் இருந்த குரங்கு ஒன்று, ஒரு சந்தர்ப்பத்தில் மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து கீழே வீசியது. ஓர் இரவு முழுதும் அது அவ்வாறு செய்தது. அந்த மரத்தினடியில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது யதார்த்தமாக ஒரு வில்வ இலை கீழேயிருந்த சிவன் மீது விழ, அதுவே அவருக்கு அர்ச்சனையானது. அதனால், அகமகிழ்ந்த சிவனார், அவரை அடுத்த பிறப்பில் சக்கரவர்த்தியாக அவதரிக்கச் செய்தார். அவரே, முசுகுந்தச் சக்கர வர்த்தி. மன்னரான பின்னும், சிவ பக்தனாக இருந்து, இந்திரன் பூஜித்த விடங்க லிங்கத்தைப் பெற்று சிவனின் அருள் பெற்றார்.
குரங்கு வடிவில் இருந்த மன்னன் வரலாறு, கயிலாயத்தில் நடந்ததாகவும், காட்டில் வேடன் ஒருவனிடமிருந்து தப்பி காட்டில் இருந்தபோது வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்து விடிய விடிய கண் விழித்து தன்னையும் அறியாமல் சிவ அர்ச்சனை செய்ததாகவும் இரு வேறு புராணங்கள் சொல்லப்படுகின்றன. திருவண்ணாமலையின் தல வரலாறு நூலில் அடிமுடி காண முடியாத படி உயர்ந்த சிவன், 'லிங்கோத்பவர்' வடிவம் எடுத்து பக்தர்களை உணர வைத்த நாள் சிவராத்திரி என காணப்படுகிறது. சிவராத்திரியை 'லிங்கோத்பவ காலம்' என்றும் சொல்வர். 'மகாநிசி காலம்' (நள்ளிரவுக்கு முன்னும், பின்னுமான ஐந்து நிமிடங்கள். அதாவது, நள்ளிரவு 11.55 - 12.05 வரை) என்று சாஸ்திரங்கள் சொல்லும் நள்ளிரவு நேரத்தில், சிவனை வழிபடுவது பல நன்மைகளைத் தரும். சிவராத்திரி, நான்கு காலங்களிலும் நான்கு விதமான அபிஷேகங்கள் சிவனாருக்குச் செய்யப்படும். முதல் கால பூஜையில் பஞ்சகவ்யம்; இரண்டாம் காலத்தில் பால், பஞ்சாமிர்தம்; மூன்றாம் காலத்தில் பழச்சாறுகள், நான்காம் காலத்தில் சந்தன அபிஷேகம் செய்வது விசேஷம். சிவராத்திரி அன்று எல்லா சிவாலயங்களிலும் உள்ள சிவபெருமானை வழிபடுவது புண்ணியத்தைத் தரும். ஆனாலும், சிவராத்திரியின் மகிமையால் உண்டான சப்தவிடங்கத் தலங்கள், பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள், பஞ்ச சபைகள், பஞ்சபூத தலங்கள், பஞ்ச ஆரண்ய தலங்களுக்குச் சென்று வழிபடுவது விசேஷம். முடிந்தவரையில் வில்வ இலைகளால் சிவனாரை அர்ச்சனை செய்ய வேண்டும். வில்வ அர்ச்சனை அவருக்கு உகந்தது என்பதால், அதனையே பிரசாதமாகப் பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால் 'சுபிட்சம்' உண்டாகும்.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments