லிங்கங்களின் அரசனான லிங்கராஜா கோயில் எங்கிருக்கு தெரியுமா?
இந்துக்களின் நம்பிக்கைப் படி, உலகனைத்துக்கும் ஆதி மூலம் சிவன். அவன்தான் உலகை படைத்து, அதை நடத்திக்கொண்டிருப்பவன் என்பது இந்துக்களின் தொன்மையான நம்பிக்கை. அப்படிப்பட்ட சிவனை லிங்கமாக வழிபடுவதும் ஒரு அறிவியல் தான் என்று பலர் கூறுகின்றனர். லிங்கமே அவ்வளவு சக்திகொண்டதென்றால், உலகில் உள்ள அத்தனை லிங்கங்களுக்கும் அரசனான லிங்கராஜா எத்தனை சக்தி கொண்டவர்.
லிங்கராஜர் யார்?
லிங்கராஜர் என்பது லிங்கங்களின் அரசர் என்ற பொருள் தருகிறது. லிங்கம் சிவனை வழிபடுவதற்கான ஒரு வடிவம் ஆகும். இது சிவனின், உருவம் உள்ளதும் இல்லாததுமான அருவுருவம் எனப்படுகின்ற திருமேனியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.
கோயிலின் பழமை
இது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இது இதன் தற்போதைய அமைப்பில், 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால், இக் கோவிலின் பகுதிகள் கி.பி ஆறாம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சில சான்றுகள் சில நூல்களில் இருந்ததாக கூறப்படுகிறது.
கட்டியது யார் தெரியுமா?
11 ஆம் நூற்றாண்டில் சோமவன்சி அரசரான, ஜஜதி கேசரி என்பவனால் கட்டப்பட்டது என மரபுவழியாக நம்பப்படுகின்றது. எனினும் இதற்கான நம்பத்தகுந்த வரலாற்றுச் சான்றுகள் இல்லை. 11 ஆம் நூற்றாண்டில் ஜஜதி கேசரி தனது தலை நகரத்தை ஜெய்ப்பூரில் இருந்து ஏகம்ரா சேத்திரம் என பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு மாற்றினான்.
கோயில்கள் புடைசூழ
இக் கோயில் 55 மீட்டர்கள் உயரமான இதன் விமானத்துடன் புவனேஸ்வரில் உள்ள கோயில்களில் மிகப் பெரியதாகத் திகழ்கிறது. சிற்பங்களால் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இக் கோயிலின் பரந்த உட்பகுதியில் அமைந்துள்ள 150 க்கு மேற்பட்ட சிறிய கோயில்களிடையே இப் பெரிய விமானம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.
தொன்மையின் பெருமை
புவனேஷ்வர் நகரத்தில் உள்ள மிகப்பெரிய கோயிலாக இந்த லிங்கராஜ் கோயில் அமைந்திருக்கிறது. பல காரணங்களுக்காக இந்த கோயில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நகரத்திலுள்ள மிக தொன்மையான கோயில் எனும் பெருமை அவற்றுள் முதன்மையான ஒன்று
அரியும் சிவனும் ஒன்னு
சிவனின் வடிவமான ஹரிஹரனுக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயில் இந்தியாவிலுள்ள மிகச்சிறந்த ஹிந்துக்கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
சிற்பக்கலை நுணுக்கங்கள்
55 மீ உயரம் உள்ள இந்த கோயிலின் ஒவ்வொரு அங்குலப்பரப்பிலும் நுணுக்கமான சிற்பச்செதுக்கல்கள் வெகு விஸ்தாரமாக பொதிக்கப்பட்டிருக்கின்றன.
கடுமையான கட்டுப்பாடுகள்
தற்போதைய நவீன யுகத்திலும் சில கடுமையான விதிமுறைகள் அல்லது மரபுகள் இக்கோயிலில் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதாவது, இன்றும் இந்த கோயிலில் ஹிந்துக்கள் அல்லாதாருக்கு அனுமதி இல்லை.
மற்றவர்களுக்கும் வழி இருக்கு!
இருப்பினும் சுற்றுச்சுவரை ஒட்டிய ஒரு பீடம் அமைக்கப்பட்டு அதிலிருந்தபடி மற்றப்பிரிவினர் கோயிலை தரிசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
குதூகலிக்கும் கோயில்
வருடம் முழுதும் இந்த கோயிலுக்கு பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்திய வரலாற்று ஆர்வலர்கள், கட்டிடக்கலை ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய கோயில் இது.

0 Comments