மாசாணி அம்மன் கோவில் பற்றிய முழு தகவல்
ஒவ்வொரு ஊர் மற்றும் அவ்வூரின் வரலாறு, பண்பாட்டை ஒட்டி அமைக்கப்பட்ட இறைவனின் ஆலயங்கள் பல இருக்கின்றன. அப்படி மனித குல பெண்ணாக பிறந்தாலும், தெய்வமாக வணங்கப்படுவதுடன் தங்களுக்கு நீதி வேண்டி வருபவர்களுக்கு குறுகிய காலத்தில் நன்மையை அளிக்கும் பொள்ளாச்சி “அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் கோவிலை” பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.
மாசாணியம்மன் கோவில் தல வரலாறு
இக்கோவிலின் தெய்வமான மாசாணியம்மன் 17 அடி நீளத்தில், கையில் மண்டையோட்டுடன், ஆகாயத்தை பார்த்து படுத்தவாறு வீற்றிருக்கிறாள். 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலயம் இது என கூறப்படுகிறது.
பழங்காலத்தில் நன்னன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை ஆண்டுவந்தான். அவனுக்கு சொந்தமான தோட்டத்தில் விளையும் மாம்பழத்தை யார் உண்டாலும் அவருக்கு மரண தண்டனை நிச்சயம் என சட்டம் விதித்திருந்தான். அப்போது ஒரு சிறுமி இந்த சட்டத்தை அறியாமல் இந்த தோட்ட பழத்தை உண்டுவிட்டாள். இதையறிந்த நன்னன் அச்சிறுமிக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றினான். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவனுடன் போர்புரிய அதில் நன்னன் கொல்லப்பட்டான். பிறகு அந்த கிராம மக்கள் அனைவரும் இறந்த அந்த சிறுமிக்கு கோவில் கட்டி வழிபடலாயினர். அக்கோவிலே மாசாணியம்மன் கோவில் என்று கூறப்படுகிறது.
கோவிலின் சிறப்பு
மக்கள் தங்களின் உடமைகளில் ஏதேனும் ஒன்று திருடு போய்விட்டால் இக்கோவிலிலிருக்கும் “நீதி கல்லில்” அரைத்த மிளகாயை தடவி தங்களின் குறையை போக்குமாறு வேண்டுகின்றனர். இப்படி வேண்டிய 90 நாட்களலுள் ஒரு நன்மையான பலன் ஏற்படும் என இவ்வனுபவத்தை பெற்றவர்கள் கூறுகின்றனர். சித்த பிரம்மை, செய்வினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோவிலுக்கு வந்து வழிபட அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு புடவை, சேவல், ஆடுகள் போன்றவற்றை கோவிலுக்கு காணிக்கையாக தருகின்றனர். மேலும் கோவிலை சுற்றி “அங்கபிரதிட்சணம்”, விழாக்காலங்களில் “தீமிதித்தல்” போன்றவற்றையும் பக்தர்கள் மேற்கொள்கின்றனர். மாசாணியம்மனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு தரப்படும் “பச்சிலை மருந்து” எனப்படும் தைலத்தை பிள்ளை இல்லா பெண்கள் தங்கள் வயிற்றில் பூசிக்கொள்வதால், அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும் மாந்திரீக பாதிப்புகள் நீங்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் உறுதியான நம்பிக்கை.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:
அனைத்து நாட்களிலும் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
கோவில் அமைவிடம்
அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் “பொள்ளாச்சி” என்ற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு சிறப்பான சாலை வழி போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஸ்ரீ மாசாணியம்மன் கோவில்
கோவில் முகவரி
அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் – 642104
தொலைபேசி எண் : 4253 282337, 4253 283173

0 Comments